முஸ்லிம்களின் பின்தங்கிய நிலைக்கான காரணம்?

கேள்வி: முஸ்லிம்களின் பின்தங்கிய நிலைமைக்குக் காரணம் அவர்களது மதம்தான் என்றும், மதத்தை நிராகரித்து வாழ்ந்த மேலைநாட்டினர் நாகரிகத்திலும் செழிப்பிலும் முன்னணியில் இருக்கிறார்கள் என்றும், எனவே மதத்தை நிராகரிப்பதுதான் முன்னேற்றத்திற்குக் காரணம் என்றும் சொல்ல முடியுமா?

பதில்: ஈமானிய பலவீனமும் (விசுவாசக் குறைபாடு) வரலாற்றைப் பற்றிய அறியாமையுமே இந்தச் சந்தேகத்திற்குக் காரணம். முஸ்லிம் சமுதாயம் ஆரம்ப காலத்தில் தங்கள் மதக் கோட்பாடுகளை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்தபோது, வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் புகழும் உன்னதமும் பெற்றிருந்தார்கள். மேற்குலக மக்களுக்கு அறிவொளி கிடைத்ததே ஆரம்பகால முஸ்லிம்களிடமிருந்து என்பதுதான் வரலாற்று உண்மை.

ஆனால், இந்தச் சமுதாயம் பிற்காலத்தில் மதத்திலிருந்து பின்வாங்கியது, மதத்தில் இல்லாத பல விஷயங்களை நம்பிக்கையிலும், சொல்லிலும், செயலிலும் அவர்கள் உருவாக்கினார்கள். அதுவே அவர்கள் பின்தங்கிய நிலைக்குக் காரணமாக அமைந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் உறுதியாகச் சொல்ல முடியும்; முஸ்லிம்கள் தங்கள் மதத்திற்கு முறைப்படி திரும்பினால், இழந்த அந்தப் புகழை மீண்டும் பெற முடியும்.

நபிகளாரின் ( ﷺ )காலத்தில் ரோமானியப் பேரரசு மிகப் பெரிய சக்தியாக இருந்தது. அதன் மன்னரான ஹெராக்ளியஸ், நபிகளாரின் (ஸல்) அன்றைய காலத்தின் கடும் எதிரியாக இருந்த அபூசுஃப்யானிடம் கூறியதைக் கவனியுங்கள்:

‘நீர் சொல்வது உண்மையானால், அவர் (முஹம்மது) ஒரு இறைத்தூதர் தான்… அவரது அங்கீகாரம் எனது பாதங்கள் பதியுமிடத்தை (ஷாம் தேசம்) நிச்சயம் வந்தடையும்.’

அபூசுஃப்யான் பின்னர் கூறினார்:

‘இப்னு அபீகப்ஷாவின் (முஹம்மது நபியை ﷺ எதிரிகள் கேலி செய்து அழைத்த பெயர்) நிலைப்பாடு வலிமை பெற்றுக்கொண்டே இருக்கிறது. பனூ அஸ்ஃபரின் மன்னர் (ரோமானிய சக்கரவர்த்தி) கூட அவரைக் கண்டு அஞ்சுகிறார்.’ (புஹாரி, முஸ்லிம்)

மற்றொன்று, மேற்குலக நாடுகளின் செழிப்பும் முன்னேற்றமும் மத நிராகரிப்பால் ஏற்பட்டவை அல்ல. இஸ்லாம் செழிப்பையும் முன்னேற்றத்தையும் ஒருபோதும் தடுத்ததில்லை. ஆனால், நாம் நமது கடமைகளை முறையாக நிறைவேற்றுவதில்லை என்பதுதான் பிரச்சனை. நாம் தீனையும் (மார்க்கம்) துன்யாவையும் (இம்மை) இழந்து கொண்டிருக்கிறோம். அல்லாஹ் கூறுவதைக் கவனியுங்கள்:

وَأَعِدُّوا۟ لَهُم مَّا ٱسْتَطَعْتُم مِّن قُوَّةٍ

அவர்களை எதிர்ப்பதற்காக உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். (திரு குர்ஆன் – 8:60)

அறிவியல் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வலிமை பெறுவதற்கான கட்டளை இதுவென்று இமாம் ஸஅதி (ரஹிமஹுல்லாஹ்) இந்த வசனத்திற்கு விளக்கம் அளித்தபோது விவரித்துள்ளார்.

هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ ذَلُولًا فَٱمْشُوا۟ فِى مَنَاكِبِهَا وَكُلُوا۟ مِن رِّزْقِهِۦ ۖ وَإِلَيْهِ ٱلنُّشُورُ

அவன்தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே, அதன் பல கோணங்களிலும் சென்று, அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவற்றைப் புசித்துக் கொண்டிருங்கள். (மறுமையில்) அவனிடமே (அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது.
(திரு குர்ஆன்- 67/15)

هُوَ ٱلَّذِى خَلَقَ لَكُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًا

அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். (திரு குர்ஆன்- 2/29)

وَفِى ٱلْأَرْضِ قِطَعٌ مُّتَجَٰوِرَٰتٌ

பூமியில் பல தொகுதிகளை சேர்ந்தாற்போல் அமைத்து
(திரு குர்ஆன்- 13/4)

இத்தகைய குர்ஆன் வசனங்கள் பூமியைப் பயன்படுத்துமாறும், நாம் சம்பாதித்து உழைக்குமாறும் மனிதனுக்குத் தெளிவாக அழைப்பு விடுக்கின்றன. ஆனால், அது மதத்தின் கணக்கில் அல்ல என்பது மட்டுமே கவனிக்கத்தக்கது.

இருப்பினும், வெறும் பௌதிக வாழ்வில் (உலக வாழ்வில்) மட்டும் வாழ்பவர்களுக்கு மதம் இல்லை. அவர்கள் அடையும் முன்னேற்றங்களும் செழிப்பும் ஒரு சோதனையாகும். இஸ்லாமியப் பார்வையில், இத்தகைய சுகபோகங்களை கருணையுள்ள அல்லாஹ் அவர்களுக்கு முன்னரே வழங்கிவிட்டான். மறுமையில் அவர்களுக்கு எந்தப் பங்கும்பேறும் மிச்சமிருக்காது.

நபி ﷺ அவர்கள் படுத்து உறங்கி எழுந்தபோது, அவர்களது உடலில் ஈச்சம்பாயின் தழும்புகள் இருப்பதைக் கண்டு உமர் (ரலி) அவர்கள் அழுதுவிட்டார்கள். அவர் கூறினார்: “இறைத்தூதரே! பாரசீகர்களும் ரோமானியர்களும் எவ்வளவு பெரிய சுகபோகங்களில் வாழ்கிறார்கள். ஆனால் உங்கள் நிலையோ இவ்வாறாக இருக்கிறதே!” நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “உமரே! உமக்கும் சந்தேகமா? தங்களுக்குரிய சுகங்கள் அனைத்தும் இந்த உலகிலேயே வழங்கப்பட்டுவிட்டவர்கள் அவர்கள்.” (புஹாரி)

அதுமட்டுமல்லாமல், பஞ்சம், கொள்ளை நோய்கள், நிலநடுக்கங்கள், பேரழிவை ஏற்படுத்தும் சூறாவளிகள் போன்றவை அவர்களையும் பாதிக்கத்தான் செய்கின்றன.

இறுதியாக, கேள்வி கேட்டவரிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால், தாழ்வு மனப்பான்மையைக் கைவிடுங்கள் என்பதேயாகும். அனுபவ யதார்த்தங்களைப் பற்றிய புரிதல் குறைவே இந்தக் கேள்விக்கான தூண்டுதலாகும். படைத்த ரப்புடைய மதம் மட்டுமே இறுதியாக வெற்றி பெறும். நாம் அந்த மதத்திற்கு முழுமையாகத் திரும்ப வேண்டும். மத நிராகரிப்பு உடையவர்களுக்குத் துக்கங்களோ, மனப்போராட்டங்களோ, துயரங்களோ இல்லை என்ற எண்ணம் தவறானது. செழிப்பும் சுகமும் வெறும் சோதனைகளே. அல்லாஹ் நம்மை நேர்வழியில் வாழ அருள் புரிவானாக.

 

www.kanzululoom.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *